அசிங்கம் தான்...
ஆனாலும்,
அப்படியே விட்டு வைத்திருக்கிறேன்!
தரை கூடும் போதே
மிரட்சியாய் பார்க்கும்
புல்லினங்களின்
பயம் கலந்த பார்வைக்காக அல்ல !
நம்பிக்கை இழக்கும் படியான
பாவனைகள்
எதுவும் செய்திராத போதும்
ஒவ்வொரு முறையும்
கலக்கதோடே வெளிக் கிளம்பி
கலவரத்தோடு கூடு திரும்பும்
தாய் பறவையின் பார்வைக்கு
இன்னும்... நான்
நல்லவனாய்
படவில்லை போலும்...
அவைகளுக்கு
நான் எப்படியோ?
ஆனால்..அதுவும்
அதன் இரண்டு தலை முறைகளும்
எனக்கு...
அத்தனைப் பரிச்சியமானவை.
பிரியமானவையும் கூட!
சப்தத்திலும்,,எச்சதிலும்
பலமுறை
சலிப்பு ஏற்பட்டாலும் கூட
எப்படியோ..
பிடித்தமானவைகளின்
பிடிக்காத செய்கைகள் கூட
மனசுக்கு
பிடித்து தான் போகிறது!
இதோ..இன்று
இந்த அறையில் எனது
கடைசி நாள்!
அனைத்து பொருட்களையும்
பெட்டிக்குள்
அடைத்துக் கொண்டிருக்கும்போது
அங்குமிங்கும் தலை சாய்த்து
ஆச்சரியமாய்
என்னையே பார்த்துக் கொண்டிருந்தது!
சலனமா..சந்தோஷமா வென்று
புரிய முடியாத உணர்வுகளோடு!
அநேகமாய்...
அதன் பிறகு நிலவிய ஆழ்ந்த
மவுனம் ஒன்றுதான்
எங்கள் உறவிற்கான
உண்மையான
உவமையாய் இருக்க முடியும்!
வாஞ்சையாய்..
கூட்டை வெறித்து பார்கிறேன்!
நாளை.. புதிதாய்
குடிவரப் போகிறவனுக்குத்
தெரியுமா?
தொங்கிக் கிடக்கும்
அடிக்கப்படாத
ஓட்டடைகளுக்கான காரணம்?
சஞ்சலத்துடனே ...
பெட்டியை மூடினேன்!
Sunday, March 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment